Thursday, February 7, 2013

விஸ்வரூபம்- சினிமா விமர்சனம்

                 சினிமா விமர்சனம் எழுதி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. மிகவும் பரபரப்பான சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் விஸ்வரூபம் குறித்து எழுதத் தோன்றியது. அப்படி என்ன தான் சர்ச்சை இருக்கிறது என்று படத்தை பார்க்கும் ஆவல் வந்தது. எதேச்சையாக 3 நாட்கள் கேரளாவில் சுற்றுப் பயணம். பிப்ரவரி முதல் நாள் கொச்சி ஸ்ரீதர் திரையரங்கில் மாலைக்காட்சி பார்த்தேன். பார்த்தவுடன் இதை எழுதத் தோன்றியது. வழக்கமான என்னுடைய இணையத் தொழில் நுட்ப அறிவு ஒத்துழைக்காத்தால் கொஞ்சம் தாமதம்.

              ம்...ப...ரூ...வ....ஸ்....வி  என்று டைட்டில் வலமிருந்து இடமாகத் தொடங்கியது. எந்த மொழி இப்படி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது என்று சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் குறியீடோ, கொத்தவரங்காயோ, படிமமோ,  லொள்ளோ, லொட்டோ, லொசுக்கோ இருப்பதாகத் தோன்றியது.

                   டைட்டிலில் பெயர்களைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. நடன அமைப்பு ப்ருஜ் மஹாராஜ் என்ற பெயரைப் பார்த்தவுடன் கால்கள் நடனம் ஆட ஆரம்பித்தன. இசை ஷங்கர்-எஹசன் -லாய் என்ற பெயர்களைப் பார்த்தவுடன் என் உதடுகள் மை நேம் ஈஸ் கான் படப் பாடல்களை பாடத் தயாரானது. எல்லாம் சரி... தயாரிப்பாளர் பெயரை மட்டும் தவறாகப் போட்டு விட்டார்கள். அது யாராக இருக்க முடியும் என்பதை பிறகு பார்ப்போம்.

                படத்தின் துவக்கத்தில் டாக்டர் நிரூபமா ( பூஜா - அணுசக்தித் துறையின் ஏதோ ஒரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் ) தன் கணவர் (கமல்ஹாசன்) கதக் நடனக் கலைஞர் விஷ்வா என்கிற விஷ்வநாத் குறித்து ஒரு நண்பரிடம் சூசகமாக ஏதோ உரையாடிக் கொண்டிருக்கிறார். அந்த நண்பர் (வஹிதா ரஹ்மான்) ஒரு நேர்காணல் போல உரையாடுகிறார். நிரூபமாவின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமானதாக இருக்கிறது.

               காட்சி மாறுகிறது. கமல் பெண்களுக்கு கதக் நடனம் கற்றுக் கொடுக்கிறார். கால்களால் இடைவிடாமல் செய்தி சொல்லும் ப்ருஜ் மஹாராஜின் நடன அமைப்புக்கு கொஞ்சமும் நியாயம் செய்யாத காட்சிகள். சலங்கை ஒலி படத்தில் வரும் நாத வினோதங்கள் பாடலுக்கு கமல் ஆடும் நடனமும், மேடையில் மஞ்சு பார்கவி ஆடும் போது சமையற்கூடத்தில் அவருக்கு சற்றும் குறைவில்லாமல் ஆடும் கமலும் தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வருகிறார்கள். 80-களில் வெளிவந்த சலங்கை ஒலி, நாயகன், பேசும் படம் தான் என்னைப் பொறுத்த மட்டில் கமல் ஹாசனை கூர்ந்து கவனிக்க வைத்தது. அதற்கு முன் எம் ஜி ஆர் நடித்த பெரிய இடத்துப் பெண், சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா இரண்டின் தொடர்ச்சியாக கமல் நடித்த சகலகலா வல்லவன் மூலம் மிக மோசமான கலைஞராக வருவார் என்ற எண்ணம் இருந்தது. அவரே அதை மாற்றினார்.

                      குக்கர் அலறுகிறது. நடனத்தின் இடையே வேகமாகச் சென்று விஷ்வநாத் குக்கரைத் திறக்கிறார். முழுக்கோழி. (அது வரை அவர் மனைவி நிரூபமாவுடன் பார்ப்பனத் தமிழில் பேசுவதாகக் காட்டப் படுகிறது). கோழியை வெளியே எடுத்து நடனம் கற்றுக் கொள்ள வந்திருக்கும் ஆண்ட்ரியாவிடம் “பாப்பாத்தி அம்மா, உப்பு காரம் சரியா என்று உனக்குத்தான் தெரியும். டேஸ்ட் பண்ணி சொல்லு” என்கிறார். (அசைவ உணவு சாப்பிடாத பார்ப்பனப் பெண்கள் படத்திற்கு தடை கோரலாம்!)

                           விஷ்வாவைத் தொடரும் நபர் நிரூபமாவிடம் விஷ்வா முஸ்லீம் என்று தகவல் தருகிறார். நிரூபமா குழப்பமடைகிறார். விஷ்வாவின் அசைவுகள் ஒரு பெண் போலவும் திருநங்கை போலவும் இருக்கின்றன. திடீரென்று ஒரு தீவிரவாதக் கும்பலிடம் கணவனும் மனைவியும் மாட்டிக் கொள்கிறார்கள். இருவரும் கைகள் கட்டப்பட்டு முட்டி போட்டு அமர்ந்திருக்கிறார்கள். பெயர் தோஃபி, என்று சொல்கிறார். இன்னொரு பெயரும் சொல்கிறார். (படம் நெடுக பிஷ்வா, விஷ்வா, விஷ்வநாத்,தோஃபி, மிஸ்டர் கஷ்மீர் இன்னும் பலப்பல பெயர்களுடன் வருகிறார்)  இசுலாமியர் என்று ஒப்புக் கொள்கிறார். அவர்களை முடித்து விட இசுலாமிய மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது.  இறுதி ஆசையாக வழிபாடு செய்து கொள்ள அனுமதிக்கப்பட கைக்கட்டு அவிழ்க்கப் படுகிறது. அட்சர சுத்தமாக நமாஸ் செய்கிறார். நிரூபமா அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். வழிபாடு முடித்தவுடன் பாடலின் பின்னணியில் விஸ்வரூபம் எடுக்கிறார். சில நொடிகளில் - உண்மையாகவே சில நொடிகளில் அனைவரையும் வீழ்த்துகிறார். சில நொடிகளில் இந்தக் காட்சி முடிந்து விடுவதால் பார்ப்பவர்களுக்கு எட்டாமல் போய் விட வாய்ப்பு இருப்பதால் காட்சி மீண்டும் நிரூபமாவின் பார்வையிலிருந்து காட்டப் படுகிறது.

                     விஷ்வாவின் நிழற்படம் அலைபேசி மூலம் தீவிரவாதக் குழுவின் தலைவன் முல்லா உமருக்கு அனுப்பப்பட அவன் விஷ்வாவை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்த அடையாளம் விஷ்வா ‘மிஸ்டர் கஷ்மீரி என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் கலந்து பயிற்சி எடுத்துக் கொண்டவனாகவும் விரிகிறது.

                 ஆப்கானில் முல்லா உமர் மட்டும் தமிழ் தெரிந்தவன். விஷ்வாவுடன்... ஸாரி, மிஸ்டர் கஷ்மீரியுடன் அவன் தமிழில் பேசுகிறான். கோவையிலும் மதுரையிலும் தங்கியிருந்த போது தமிழ் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறான். மற்ற அனைவரும் பஷ்தோ மொழியில் தான் பேசுகிறார்கள்; நாசர் உட்பட; ஆப்கனில் நேட்டோ படை குண்டு மழை பொழிகிறது. அது சரியாகத் தீவிரவாத இலக்குகளை மட்டும் தாக்குகிறது. அது எப்படி என்பது மிஸ்டர் கஷ்மீரிக்கே வெளிச்சம்.

                   படம் பார்ப்பவர்களை மிகுந்த புத்திசாலிகளாகக் கற்பனை செய்து வைத்திருப்பதால் பல காட்சிகள் தொடர்பில்லாமல் வந்து போகின்றன. தன் மகன் ஆங்கிலம் பேசுவதை முல்லா உமர் கடுமையாகக் கண்டிக்கிறான். இனி ஒரு வார்த்தை ஆங்கிலம் பேசினாலும்...... என்று எச்சரிக்கிறான். தன் மனைவியின் மூச்சிழைப்பு நோய்க்கு மருத்துவம் பார்க்க வந்த பெண் மருத்துவரை பர்தா அணியவும், தலையையும் முகத்தையும் மூடவும் அறிவுறுத்துகிறான். இந்தத் தீவிரவாத அமைப்புக்குள் விஷ்வாவால் எப்படி நுழைய முடிந்தது என்பது எங்கும் சொல்லப்படவில்லை. ரசிகர்கள் தான் மிகுந்த புத்திசாலிகள் ஆயிற்றே! அவர்களே புரிந்து கொள்வார்கள்; படம் பார்த்தவர்களிடையே கூட கமல் இந்துவா - முஸ்லிமா என்ற கருத்து விவாதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

                      முல்லா உமர் அமெரிக்காவில் அப்பாஸி என்ற கறுப்பின இஸ்லாமியத் தற்கொலைப் (ஜிகாதி) படையைச் சேர்ந்தவனை பயன்படுத்தி நியூயார்க்கை அழிக்க திட்டமிடுகிறான். ( நமாஸ் படித்து விட்டு விஷ்வா அப்பாஸியைக் கொல்கிறார்). அது அலைபேசியுள்ளே அணு குண்டை வைத்து வெடிக்கச் செய்து அணுக்கதிர் வீச்சு மூலம் அமெரிக்கர்களை கொல்லும் திட்டம். அலை பேசி அழைப்புக்கு இணைப்பு கிடைத்து விட்டால் வெடித்து விடும். இந்தப் பின்னணியில் விஷ்வாவை விட அணுக்கதிர் வீச்சுச் செயல்பாடு குறித்து அதிகம் அறிந்த முனைவர் நிரூபமா அதைத் தடுத்து அமெரிக்காவைக் காப்பாற்றுகிறார். இடையில் முல்லா உமர் தப்பித்து தனி விமானத்தில் பறந்து விடுகிறான்.

                           விமானத்திலிருந்து தான் உமர் அப்பாஸியின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்கிறான். தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகத் தொடர்ந்து தகவல் வருவதால் அமெரிக்காவை அழிக்க முடியாத ஏமாற்றத்துடன் பறந்து விடுகிறான். இந்தச் சதியை முறியடிக்க விஷ்வா எப்படி அமெரிக்காவின் உளவு நிறுவனமான எஃப். பி. ஐ ( Federal Bureau of Investigation ) -க்கே தெரியாமல் அமெரிக்காவில் பணியாற்றுகிறார் என்பது அவர்களைப் போலவே நமக்கும் புரியவில்லை. அணுக்கதிர் வீச்சிலிருந்து அமெரிக்கா தப்பி விடுகிறது. உமரும் தப்பி விடுகிறான். (நம்மால் கூடங்குளத்திலிருந்து தப்ப முடியுமா ? விஷ்வா உதவுவாரா ?) சுபம் போடுவதற்கு முன் விஷ்வா இந்திய ராணுவ வீரன் என்ற செய்தி வெளிப்படுத்தப்படுகிறது. படம் முடியவில்லை. “எல்லாம் நன்றாக முடிந்து விட்டது” என்று கூறப்பட விஷ்வா “இல்லை, உமரை அழித்தால் தான் எல்லாம் முடியும்” என்று கூறி படத்தை இரண்டாம் பாகத்திற்குத் தள்ளிப் போடுகிறார்கள். படத்தின் பெயர் ‘மூ’ என்று சொல்லப் படுகிறது. ஏனெனில் Gangs of Wasseypur போல படம் 5 மணி நேரத்திற்கு எடுக்கப்பட்டுப் பாதி திரையிடப் பட்டிருக்கிறது. மறு பாதி இந்தியாவில் நடப்பது போல எடுக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

                           முதல் பகுதியில் படத்தயாரிப்பாளர் குறித்து குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் இதைத் தயாரித்திருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியமாகத்தான் இருக்க முடியும் ! அமெரிக்க அதிகார வர்க்கத்தின், ஏகாதிபத்தியத்தின் கைகள் எங்கெங்கோ நீளும் போது ஆழ்வார்ப்பேட்டைக்கு நீண்டிருக்க முடியாதா என்ன ?

       ”கந்தசாமி படத்தில் வடிவேலுவை பிடித்துக்கொண்டு போலீஸ் அதிகாரி பிரபுவிடம் நிறுத்துவார்கள், நினைவில் இருக்கிறதல்லவா? "ஐயா, நீங்க கூப்பிட்டு விசாரிக்கிற அளவு நான் பெரிய ஆள் இல்லை, டம்மி பீஸு" என்று வடிவேலு ஆனமட்டும் கெஞ்சுவார். கேட்காமல் அவர் மேல் வாட்டர் கேனன் வைத்து தண்ணீர் அடிக்க வடிவேலு குளித்து துணி துவைத்து வேறு என்னவெல்லாமோ செய்யத் துவங்கிவிடுவார். பிரபு தலையில் அடித்துக்கொண்டு அவனை முதலில் வெளியே அனுப்புங்கள் என்று சொல்வார்”.  என்று ராஜன் குறை இப்படத்தைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது.

                   ”வியாபார தேவையோ அல்லது வேறெதுவோ கமலுக்கு இந்து தீவிரவாதி பாத்திரத்தை சாதாரண மனிதனாகவும் இசுலாமிய தீவிரவாதியை அங்கேயே கொல்லப்பட வேண்டியவனாகவும் காட்ட தூண்டுகிறது. இந்த வகை காட்சிகளை அர்ஜுன், விஜயகாந்த் போன்றவர்கள் செய்வது புரிந்துகொள்ளக்கூடியதுதான், காரணம் அவர்கள் அடிமுட்டாள்தனமாக செயல்படுவதற்கான எல்லா தகுதியும் உடையவர்கள். கமல் தன்னை எல்லாம் தெரிந்தவர் என காட்டிக்கொள்ள பெரு முயற்சி செய்பவர். அதை நாம் நம்புவதற்கான எல்லா தகுதியும் கொண்டவரும்கூட. ஆகவே அவர் இசுலாமியர்களை தீவிரவாதியாக காட்டுவது மற்ற அரைவேக்காடுகள் செய்வதைக்காட்டிலும் ஆபத்தானது. அவரிடம் இசுலாமிய தீவிரவாதத்துக்கான மூல காரணத்தை சொல்லும் துணிச்சலும் இல்லை. இந்து தீவிரவாதத்தை உள்ளபடி காட்டும் நேர்மையும் இல்லை. அதுவும் இல்லாவிட்டால் இரண்டு பிரச்சனையையும் சொல்லாமல் ஒதுங்கிப்போகும் குணமாவது இருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை” என்ற வில்லவனின் கூற்றையும் மறுக்க முடியவில்லை.

                   நமக்கு இயல்பாக எழும் கேள்விகளை வரிசைப் படுத்தலாம்;

1)              படத்தில் இசுலாமியர் அனைவருமே தீவிரவாதிகளாகக் காட்டப்படுவது ஏன் ? கோடிக்கணக்கான அப்பாவி இசுலாமியர்கள் இருக்கிறார்கள் என்பது ஏன் எங்குமே சொல்லப்படவில்லை ?
2)                 தீவிரவாதம், பயங்கரவாதம் இவை எல்லா மத அடிப்படைவாதிகளிடையேயும் உண்டு; லஷ்கர்-ஈ-தொய்பா, அல்கொய்தா, ஜமைத் இஸ்லாமி போலவே காவிப்படையிலும் பல கிளை அமைப்புகள் உண்டு; கிறித்தவ அரச பயங்கரவாதம் தானே அமெரிக்க வாதம் ?
3)                 ஆண்ட்ரியா என்ற நடிகை படத்தில் என்ன செய்கிறார் ? ஒரே ஒரு காட்சியில் இசுலாமிய நெட்வொர்க்களின் சங்கேத வார்த்தைகளை (Passwords) கூறுவதுடனும் சிக்கனில் உப்பு காரம் சரியாக இருக்கிறதா (இவர் படத்தில் ஒரு பாப்பாத்தி)என்று பார்ப்பதுடன் அவர் பணி முடிந்ததா ?
4)                 அமெரிக்க அதிகார வர்க்க மனோ பாவத்துடன் ஒருவன் இந்தியாவில் எப்படி வாழ முடியும் ? மேலை இசுலாமும் கீழை இசுலாமும் ஒன்றா ?
5)                  இந்திய ராணுவம் அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கே தெரியாமல் எப்படி ஒரு ராணுவ வீரனை அங்கு அனுப்ப முடிந்தது ?
6)                   வழக்கமாக கமல்ஹாசனை உலக நாயகன், ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவன் போன்ற உயர்வு நவிற்சியில் பாடல்கள் திட்டமிட்டு அமைக்கப்படுவது அவருக்கு உடன் பாடானதா ?
7)                     ஒரு தீவிரவாதக் குழுவுக்குள் இவ்வளவு எளிதில் ஊடுருவி அவர்களை ஓர் அந்நியன் நம்பச் செய்ய முடியுமா ?
8)                    ’எந்தக் கடவுளை’ என்ற வழக்கமான கமலின் நாத்திகவாத டெம்ப்ளேட் வசனம் இந்தப் படத்துக்கு எப்படி பொருந்தும் ? ஒன்று கிருஷ்ணனாகவோ அல்லது அல்லாவாகவோ தானே இருக்க முடியும் ?
9)                    அசைவம் சாப்பிடாத பார்ப்பனப் பெண்களைச் சீண்டுவதும், திருநங்கைகளை சீண்டுவதும் இந்தப் படத்திற்கு எப்படிப் பொருந்தும் ?   
10)                     மிகச் சிறந்த நடனக்காரரான கமலின் கால்களால் ‘கதக்’ நடனம் ஆட முடியாமல் போனது ஏன் ?
11)                 ஆப்கனில் தீவிரவாதிகள் மட்டும் தான் இருக்கிறார்களா ? அப்பாவிகளே இல்லையா ?
12)                 அமெரிக்காவைக் காப்பாற்றும் இந்தப் படத்தில் கைகள் துண்டாவதும், உடல்கள் சிதைவதும் கால்கள் வெட்டப் படுவதுமான கோரமான காட்சிகள் கூட அமெரிக்க மன நிலையை குளிர்விக்கத் தானா ?
         
                            இது ஒரு மோசமான வணிகப்படம்; பேசாமல் விட்டிருந்தால் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போயிருக்கும். சர்ச்சைகளால் சுமார் 25 கோடி அளவுக்கு விளம்பர செலவு மிச்சமாகியிருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

                        திரையரங்கில் என் சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாகச் சேர்த்து 110 டிக்கட்டுகள் முன் பதிவு செய்தேன். தங்குமிடத்தில் உதவியாளராக இருந்த நண்பர் ரூபின் தனக்கும் வாங்கச் சொன்னார். 111 வாங்கினேன். படம் பார்க்கும் அனைவருடைய நெற்றியிலும் அது தான் விழப்போகிறது என்று தெரியாமல் !
                   
                       தொடர்புடைய பதிவுகள் :
                   http://karundhel.com/2010/09/copies-kamalhassan-evidences.html
                   http://karundhel.com/2010/10/copies-kamalhassan-videos.html